தாய்மடியிற் படுத்துறங்கிய திண்ணைகளும்…..
ஆவணியிற் பூத்துக்குலுங்கிய வேப்பமரமும்…
அதனடியிற் தூங்கிய அந்த இனிமையான தூக்கமும்,
அதன்போது ஏற்பட்ட சொற்பனங்களும் என்று மீண்டும்?…
மனம்விட்டுச்சிரித்த நாட்களும் போய்…
நாளாகி, மாதமாகி இன்று வருடங்களாகி…
அந்நிய தேசத்தில் ஓர் இயந்திர வாழ்க்கை…
இதையா நாம் கேட்டோம்?…
வினையாகிப்போன வினாக்கள் ஆயிரம்…
நம் பாதச்சுவடழிந்து மாற்றான் சுவடு பதித்த இடங்கள்,
நாம் ஓடி விளையாடிய அந்த புற்றரைகள்,
அழகான துவிச்சக்கரவண்டிப் பயணங்கள்…
கூட இருந்த நண்பர்கள் இன்று புகைப்படமாக வீட்டுச்சுவரில்…
சிரித்து மகிழ்ந்த மதகுகளும், வீதிகளும், கோயிலடிகளும்…
ஆலமர விழுது பிடித்தாடிய ஊஞ்சலும்…
கோயிலடி மணலிருந்து கொறித்த கச்சானும்…
திருவிழாக்களும், கொண்டாட்டங்களும்…
திரண்டுவரும் நம் உறவுகளின் சந்திப்புக்களும்…
சிறு சிறு சண்டைகளும், சச்சரவுகளும்…
சவாரித்திடலில் நடக்கும் வண்டிச்சவாரிகளும்…
நம்மூரிலிருக்கும் சிறு பெட்டிக்கடைகளும்…
அக்கடை முதலாளியை அழைக்கும் செல்லப்பெயர்களும்…
நண்பர்களுக்கு சூட்டும் பட்டப்பெயர்களும்…
வீதிக்கிரிக்கட்டுக்கு இடும் நம் குழுமச்சட்டங்களும்…
மரத்தடியில் விளையாடிய கிளித்தட்டு, தாச்சியும்…
வயல்வெளியில் நாமடித்த கிட்டிப்புல்லும்…
களவாய் மாங்காய் பறித்து உப்புடனுண்ட நாட்களும்…
எங்காவது நடக்கும் இசை நிகழ்ச்சிகளும், அதில் போடும் ஆட்டமும்….
கல்லாலெறிந்து உடைக்கும் முட்டிகளும்…
கட்டி மகிழும் மணல் வீடுகளும்…
வீதிகளில் நாம்போடும் சைக்கிளோட்டப் போட்டியும்…
எல்லாமே பகற்கனவுகளாக இன்று…
விரைவாக இயங்கும் மனிதர்களும்…
நான்கு சுவர்களுடன் நாம் பேசுவது…
தொல்லை தரும் தொலைபேசிகளும்…
விசித்திர மனிதர்களுடனான நட்புக்களும்…
வெறுத்துப்போன எங்களின் வாழ்வும்…
எம் மண்ணிற்கு என்று நாம் திரும்புவோம் என்ற எண்ணமும்…
என்று எங்களின் சுதந்திரக்காற்றை சுவாசிப்போமென்ற ஆதங்கமும்…
கலங்கிய மனங்களில் குடில்போட்டு அமர்ந்துவிட்டன….
எப்போது?…எப்படி?…எங்களூர் எப்படி இப்போது?…
அண்மைய மறுமொழிகள்